| |
| 20 லட்சம் பார்வையாளர்கள், 25 புதிய அறிமுகங்கள்... கலக்கலான ஆட்டோ எக்ஸ்போ! | | |  | | | டெல்லி: தலைநகர் டெல்லியில் 7 நாட்கள் நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2010, கடும் பனி- குளிரிலும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இதற்கு முன் நடந்த கண்காட்சிகளை விட பிரமாண்ட வெற்றி என்று இந்த கண்காட்சியை வர்ணிக்கின்றனர் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை...
"உலகம் முழுவதிலுமிருந்து 2105 பெரிய / நடுத்தர கார் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஒரே ஷோ இதுவாகத்தான் இருக்கும். அதே போல 7 நாட்களில் 20 லட்சம் மக்கள் பங்கேற்பது சாதாரண நிகழ்வல்ல" என்கிறார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
மேலும் அவர் கூறுகையில்,
"இந்த ஷோ, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் அபார வளர்ச்சியை, வளத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகின் எந்த ஒரு கார் தயாரிப்பாக இருந்தாலும், இந்த சாலைகளைத் தொடாமல் அவை இருக்கவே முடியாது என்ற நிலையை சர்வதேச நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. இந்தியாவைச் சார்ந்த தொழில் என்று பார்த்தால் நிச்சயம் கார் - வாகனத் தயாரிப்பு முன்னிலையில் நிற்கும்...
இந்தியாவில் 1000 மக்களுக்கு 9 பேர்தான் சராசரியாக கார் வைத்துள்ளனர். சீனாவுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. அதேநேரம் குறைந்த விலைக் கார்களுடன் உலக நிறுவனங்கள் நம்மை நோக்கி வரத் துவங்கியுள்ளன.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இது வழிவகுக்கும்" என்றார் சிந்தியா.
இந்த எக்ஸ்போ குறித்துப் பேசிய ஹீரோ மோட்டார்ஸ் தலைவர் சுனில்காந்த் முஞ்ஜால், "1986லிருந்து நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ - கண்காட்சிகளிலேயே பெஸ்ட் என்றால் இந்த ஆண்டு நடந்ததைத்தான் சொல்வேன். சர்வதேச கார் தயாரிப்பாளர்களின் பார்வை முழுமையாக இந்தியாவின் பக்கமே இருந்தது இந்த 7 நாட்களும்" என்கிறார். |
|
|
|
|