| |
| முதல் மழை மு.குருநாதன் | | |  | | | முதல்மழை பொழிகிறது
இரவினிடையே
குறும்பகல் உருவாக்கும்
மின்னல் கீற்றையும் நனைத்து !
இடியுடன், நீரின்
இரைச்சலைச் சேர்த்து
அடிக்கிறது பெருமழை
என் அன்னையின் தூக்கம் கலைத்து !
கூரையின் துவாரங்களைக்
கண்டவுடன் ஆர்வமாய்க்
கொந்தளித்து நுழைகின்றன
நீர்க்கோர்வைகள் !
தரையை தொட்டதும்
தண்ணீர் வாளிகள்
தம்வாய் பிளக்க
நிறைகிறது வயிறு !
மாற்றப்படும் வாளிகளின்
விளிம்புகள் வாயிலாக
துள்ளிக் குதிக்கின்றது தண்ணீர் !
களிமண் சுவரின்
மண்கரைசல்கள் கோடிட்டு
ஒவ்வொரு மனிதனின்
ஆயுட் காலத்தை உணர்த்துகின்றன !
இப்போது,
வீட்டுத்தரையின் விலாசம்
வேளாண்மைக்குத் தக்கதாகிறது !
அதில் ஓரிடம் மட்டும்
வெற்றிடம் ! அது
நெருப்பை நெஞ்சில் கொண்டு
நினைவிலாது நான் துயின்ற இடம் !
|
|
|
|
|